சென்னை:
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நாமக்கல், வட சென்னை தெற்கில் கிழக்கு, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது பேசிய நிர்வாகிகள், “தொண்டர்கள் அனைவரும் உங்கள் (பழனிசாமி) தலைமையில்தான் இருக்க விரும்புகின்றனர். சிலர் சுய நலத்துக்காக கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
அவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் அடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் கரத்தை பலப்படுத்துவோம்” என்றனர்.
பின்னர் பழனிசாமி பேசியதாவது: விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. உங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
தோல்வியைச் சந்திக்கும்போது, கட்சியில் இருந்து சிலர் விலகுவது இயல்புதான். தோல்வியைக் கண்டு அதிமுக ஒரு போதும் அஞ்சியது இல்லை.
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு நிச்சயம் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். கட்சிக்காக கடுமையாக உழையுங்கள். பலன் உங்களைத் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.