சென்னை;
நம்முடைய நிலங்களும் தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் வகையில் நில ஆதார் கார்டை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு இருக்கிறதோ, அதேபோல நம்முடைய நிலத்திற்கும் ஒரு ஆதார் கார்டு இருக்கும். இதனை இனிவரும் 3 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட்டில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நிலச் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் கீழ், கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் அல்லது பூ-ஆதார் (Bhoo-Aadhaar) என்ற திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நகர்ப்புற நிலங்களை டிஜிட்டல் மயமாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் இந்த இலக்கை அடைய மாநில அரசுகளுக்கு, அரசு நிதியுதவி அளிக்கும். நிலம் தொடர்பான தகராறுகளுக்கு இந்த பூ-ஆதார் ஒரு முற்றுப் புள்ளியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து நிலங்களும் பூ ஆதாரின் கீழ் வரும். இதற்கு 14 இலக்க தனித்துவமான அடையாள எண் ஒதுக்கப்படும். இந்த செயல்பாட்டின் மூலம், நிலத்தின் அடையாள எண்ணுடன் நிலப்படம், உரிமை மற்றும் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் வேளாண் கடன் பெறுவது எளிதாகும். இதைத் தவிர, வேறு விவசாய சார்ந்த வசதிகளையும் எளிதாகப் பெற முடியும். மறுபுறம், நகர்ப்புற நிலங்களின் நில ஆவணங்கள் ஜிஐஎஸ் வரைபடத்துடன் கணினிமயமாக்கப்படும்.
இதில் முதலில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நிலம் ஜியோடேக் செய்யப்படுகிறது. இதிலிருந்து நிலத்தின் ஜியாக்க்ராபிகள் இன்பர்மேஷனை தெரிந்து கொள்ளலாம். அதன் பின், நில சர்வேயர்கள் நிலத்தின் எல்லையை அளவிடுகிறார்கள். இதைச் செய்த பிறகு, சேகரிக்கப்பட்ட விவரங்கள். லேண்ட் ரெக்கார்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் அமைப்பில் பதிவேற்றப்படுகிறது. இதற்குப் பிறகு, கணினி தானாகவே 14-இலக்க பூ ஆதார் எண்ணை நிலத்திற்கு உருவாக்குகிறது.
இந்த பூ ஆதார் திட்டம் நிச்சயமாக இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நில உரிமை தொடர்பான தெளிவு, விரைவான பரிமாற்றங்கள், கடன் வசதி மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல நன்மைகள் கிடைக்கும். மேலும் நிலம் தொடர்பான தகராறுகளை குறைக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.