வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கையில்லை – திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை:
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பல மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையில் உடன்பாடில்லை என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

இதனிடையே வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை; சிபிஐ விசாரணை மீதும் நம்பிக்கை இல்லையென்றாலும் வேறுவழி தெரியவில்லை. வேங்கைவயலில் போராடும் விசிகவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக மீண்டும் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்.வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.

வேங்கைவயலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் செல்வதாக தகவல் வந்தது, அதற்கு நான் ஆதரவு தெரிவித்தேன். ஆனால் வேங்கைவயல் குறித்து தவெக தலைவர் விஜய் எதுவும் பேசவில்லை என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *