முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை:
முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.

எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *