திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்.
அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்னதாக இந்த மாதம் 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் தென்மேற்கு பருவமழை அதற்கு முன்னதாகவே தொடங்கி விடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறியாக தற்போதே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. மேலும் வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வடக்கு கேரளத்தில் உள்ள இந்த மாவட்டங்களில் பொதுமக்களை உஷார்படுத்தும் விதமாக நேற்று மாலை “சைரன் ஒலி” எழுப்பப்பட்டது.
பேரிடர் தயார்நிலை மற்றும் பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கேரளாவின் “கேடய அமைப்பு” மூலமாக இந்த 4 மாவட்டங்களிலும் “சைரன் ஒலி” எழுப்பப்பட்டது.
மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தணணீர் தேங்கும் அல்லது நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் மாவட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் பாாதுகாப்பு உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றவும் பொதுமக்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.