சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் கொடியேற்றி பூஜைகளை நடத்தினார்.
நாளை (24-ந் தேதி) வெள்ளி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
27-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 28-ந் தேதி வெள்ளி யானை வாகனம், 29-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.
2-ந் தேதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.
அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.