சென்னை:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும்.
அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ‘வாட்டர் பெல்’ திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும்.
இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, காலை மணிக்கு பெல் அடித்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தினர்.