சென்னை:
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர் .
முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களுக்கான 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.
மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். நடனம், சிலம்பம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.