பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி சீமான் மனு: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதனால் புதிய பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *