ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27-ந்தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28-ந்தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.
ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.
அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.
ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். .
ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.