சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
வழக்கமாக அனிருத் இசையமைக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பயர் எமோஜி போடுவது வழக்கம். அப்படியென்றால் அப்படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுவார்கள்.
ஆனால் அண்மைக்காலங்களில் அவர் இசையமைத்து வெளியான படங்களுக்கு அனிருத் பயர் எமோஜி போடாதது பேசுபொருளானது.
இந்நிலையில், கூலி படம் தொடர்பாக பேட்டி அளித்த அனிருத், “நான் பயர் எமோஜி போடுவதை நிறுத்திவிட்டேன். பல படங்கள் நன்றாக இல்லை என்று எனக்குத் தெரியும், தெரிந்தும் எமோஜி போட்டால் அது தவறாகிவிடும்.
ஜெயிலர் படத்தை பொறுத்தவரை நான் நன்றாக இருப்பதாக நினைத்து பயர் எமோஜி பதிவிட்டேன். ஆனால் எல்லா படங்களுக்கும் அப்படி போடுவது எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால் கூலி படம் சூப்பராக வந்துள்ளது. நான் இங்கே ஃபயர் எமோஜியைக் கொடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.