கோவை;
பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுகிறார் என கூறி கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் வடை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதனப் பிரச்சார இயக்கம் நேற்று கோவையில் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர். ஆனால், போலீஸார் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அப்படி வழங்கினால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.
இதனையடுத்து பாஜகவினர், முதலமைச்சர் ஸ்டாலினின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.