கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!

பத்மஸ்ரீ திருமதி.சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் இந்திய பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்கள்.

அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இந்த செய்தியினை கேள்விப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

இதன்படி பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *