டெல்லி;
கடந்த 8-ம் தேதி முதல் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரத்தை துவக்கி பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ’மகிளா சம்மன் சமோரோ’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
”மற்ற பெண்கள் பாஜகவுக்கு ஆதரவளித்தால் அவர்களிடம் சொல்லுங்கள். உங்களுடன் நிற்பது சகோதரன் கேஜ்ரிவால் மட்டும்தான் என்று. அவர்களிடம் கூறுங்கள் நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கி இருக்கிறோம். பேருந்து கட்டணத்தை இலவசமாக்கி இருக்கிறோம். தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம்.
உங்களுக்கென்று பாஜக இதுவரை என்ன செய்துள்ளது? பின் எதற்காக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்? இந்த முறை கேஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
”சமீபகாலமாக சில பேர் பிரதமர் மோடியின் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றனர். ஆனால் அதை நீங்கள் சரிப்படுத்த வேண்டும். உங்கள் கணவர் மோடியின் பெயரை முழங்கினால், அவருக்கு இரவு உணவு வழங்காதீர்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களை கேஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவளிப்பதை உறுதி செய்யுங்கள்” என்று பேசினார்.