சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் காரணமாக முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வேறொரு தேதியில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நடைபெறவிருந்த ரோடு ஷோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாறாக அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (2-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் (3-ந்தேதி) காலை காரில் புறப்பட்டு ராமநாதபுரத்தையடுத்த பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.