தென்காசி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அவ்வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று மதியம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வந்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆவுடையப்பன், ராணி ஸ்ரீகுமார் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசிக்கு வந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்’’ என கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், மாவட்ட தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சபிக் அலி மற்றும் நகர, ஒன்றிய பேரூர் தி.மு.க. செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.