தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.
குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆற்று கரைகள் உடைந்து விட்டது.
இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த 2024-ம் ஆண்டு ஜுலை 6ம் தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.
அப்போதைய மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா நிறுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம், தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது.
மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து தற்போதைய மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆலோசனைப்படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது.
கடந்த 2.2.2025 அன்று ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மேலஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேற்பார்வையில் துவங்கியது.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை முன்மாதிரி தாமிரபரணியை உருவாக்க மாவட்ட கலெக்டரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மூலமாக தாமிரபரணியின் கரையோரங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் 1,000 மரக்கன்று நடும் பணி கடந்த மாதம் 6.9.2025 அன்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தால் துவக்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் பனை விதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்ரீவைகுண்டத்தில் 9.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார். மூன்றாம் கட்ட பணிகள் தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் கோட்டாட்சியர் பிரபு தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நான்காம் கட்ட பணி பொன்னன்குறிச்சி தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு மரக்கன்று நட்டு, பதை விதைகள் மற்றும் விதைப்பந்துகளை விதைத்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியபோது, “ஆற்றின் கரைகளை பலப்படுத்திடும் நோக்கத்திலும், கரைகள் மண் அரிப்பினால் சேதமாகிடுவதை தடுத்திடும் வகையிலும் கரையோரங்களில் பனை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாணவர்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதில் பள்ளி மாணவ மாணவிகள் முன் நின்று நடத்துவதால் அவர்களுக்கு மரம் மீதும், நதி மீதும் ஒரு பிடிப்பு ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை உள்ளாட்சித்துறை சார்பில் நிறைய மரக்கன்றுகள் நடப்பெற்று வருகிறது.
இதற்காக ஒன்றிய அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். மரம் நடும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு தரும். தாமிரபரணியை சுத்தப்படுத்தி விட்டு மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசானமுத்து, உள்ளூர் பிரமுகர் அருள், கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, பொதுப்பணித்துறை கூடுதல் பொறியாளர் அமீர்கான், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்டோபர்தாசன், துணை தாசில்தார் லோகநாதன், பொன்னன்குறிச்சி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை சரஸ்வதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், துணைத்தலைவர் கணபதி, மணிகண்டன், எக்ஸ்னரோ கபடி முருகன், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சுவாமிநாதன், முருகன், வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சமூக சேகவர் சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி சேர்மன் கந்தசிவசுப்பு, நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சந்துரு, தங்கராஜ், கோபால், செல்வன்துரை, விஜயகுமார், ஆனந்தசெல்வன், ஜெயராம், சுடலைமணி, மகளிர் குழுவினர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்பட ஊர்பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், பொன்னன்குறிச்சி ஊர்மக்கள் செய்திருந்தனர்.