மக்களை சந்திக்க தெம்பு இன்றி குறுக்கு வழியை நாடியுள்ளனர்; இப்படி போய்க்கொண்டிருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை !! மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது. இதற்காக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் செயல்பட்டு வருகிறோம்.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது அதிமுக. கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு எஸ்.ஐ.ஆர் தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து நான் நீதிமன்றம் சென்றால், அதிமுக ஆதரித்து நீதிமன்றம் செல்லும் வெட்கக்கேடான நிலை நிலவுகிறது. மக்களை சந்திக்க தெம்பு இன்றி குறுக்கு வழியை நாடியுள்ளனர்.

இப்படி போய்க்கொண்டிருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை.

மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இந்தியாவின் குடிமக்கள்தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், அப்படியான சுமையை நம் மீது சுமத்தியிருக்கிறது. இதற்கு மூலக்காரணமாக மத்திய பாஜகவினர் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிரான நிலைப்பாட்டை அந்த மாநில அரசுகள் உறுதி செய்துள்ளன. கேரளாவில் எதிர்க்கட்சியும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக போராடி வருகிறது.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.

நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. எனவே, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே இருந்து பொதுமக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது.

எஸ்.ஐ.ஆர். படிவங்களை பொதுமக்கள் நிரப்புவதற்கு தி.மு.க பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *