பனாஜி:
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
கோவாவின் பனாஜியில் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்றின் டை-பிரேக்கரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரி கிருஷ்ணாவும், பெரு நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜோஸ் எடுவார்டோ மார்டினஸ் அல்கான்டாராவும் மோதினர்.
இதில் அல்கான்டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி கிருஷ்ணா வெளியேறினார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு 5-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியும், கிராண்ட் மாஸ்டர் லெவோன் அரோனியனும் (அர்மீனியா) மோதினர்.
இதில் அர்ஜுன் எரிகைசி 1.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறவுள்ள கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி, கிராண்ட்மாஸ்டர் வெய்யியுடன் மோதவுள்ளார்.