வறுமை நீங்கி செல்வம் பெருக ஐயப்பன் வழிபாடு!!

கார்த்திகை மாதம் பல தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்பட்டாலும், கார்த்திகை என்றால் பெரிய அளவில் பேசப்படுவது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது தான்.

அப்படியான ஐயப்பனை 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி அவருடைய தரிசனத்தை காணுவதே பெரும் பாக்கியம் என்று சொல்லலாம். இந்த ஐயப்பனை மட்டும் நாம் நினைத்த போதெல்லாம் தரிசனம் செய்ய முடியாது. அவரை தரிசனம் செய்வதற்கென கடுமையான விதிமுறைகளும் நேரமும் உண்டு.

இந்த இருமுடி வழிபாட்டை அனைவராலும் செய்ய முடியாது அல்லவா? ஆகையால் ஐயப்பனை வீட்டிலிருந்தபடியே கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை எப்படி வழிபட்டால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ நிலை எட்டலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கான காலம் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் பரவாயில்லை தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தையே ஐயப்பனாக பாவித்து வணங்கலாம். அடுத்து ஒரு வாழை இலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் முழுவதுமாக பச்சரிசியை மஞ்சள் கலந்து பரப்பி விடுங்கள். அடுத்து ஏழு மண் அகல் விளக்கை எடுத்து பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு அடுத்து மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிண்ணத்தில் நெய், மற்றொரு கிண்ணத்தில் மூன்று பழங்கள் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அது உங்களுக்கு விருப்பமான எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு கிண்ணத்தில் நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைத்து விடுங்கள்.

இப்போது வாழை இலையில் பரப்பி வைத்திருக்கும் அரிசியை பூஜை அறையில் வைத்து அதை சுற்றி நைவேத்தியத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு ஏழு அகல் விளக்கை பச்சரிசியை பார்த்தவாறு சுற்றி வைத்து ஏற்றுங்கள்.

இந்த விளக்குகளை ஏற்றிய பிறகு நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஐயப்பனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இந்த வார்த்தையை 108 முறை ஐயப்பனை நினைத்து சொல்லிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நைவேத்தியங்களை உண்ணலாம்.

ஐயப்பனை நினைத்து செய்யப்படும் இந்த எளிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையை மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஐயப்பனை காணவும் அவருடைய தரிசனத்தை பெறவும் கோடான கோடி மக்கள் அவரை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *