சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 91 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. உரிமம் பெறாவிட்டால் வரும் நவ.24-ம் தேதி முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் கடந்த ஒரு மாதமாக செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், நாய்களின் உரிமையாளர்கள் அவற்றை பல்வேறு காரணங்களுக்காக பராமரிக்காமல் தெருவில் விடுவதைத் தடுக்கவும், செல்லப் பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறதா என்பதை கண்காணிக்கவும் மைக்ரோ சிப்பை இலவசமாகப் பொருத்தி வருகிறது.
7 இடங்களில் சிறப்பு முகாம்கள்: இதற்கான சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதில் நேற்று ஒரே நாளில் 3091 செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. உரிமம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
33,418 செல்லப் பிராணிகளுக்கு… இதுவரை 77,707 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 33,418 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.