சென்னை:
சென்னை எழும்பூர் – ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல்- கோவை, சென்னை சென்ட்ரல் -விஜயவாடா, எழும்பூர் – திருநெல்வேலி, எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் உட்பட 10-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மற்ற விரைவு ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும், பல வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், எழும்பூர் – ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்துகளின் புனித தலமான ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பேரில், சென்னை எழும்பூர் – ராமேசுவரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த வந்தே பாரத் ரயிலுக்கான தற்காலிக நேர அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேசுவரத்தை அதேநாள் மதியம் 1.15 மணிக்கு அடையும்.
இந்த ரயில் தாம்பரத்தில் அதிகாலை 5.50 மணிக்கும், விழுப்புரம் சந்திப்பில் காலை 7.18 மணிக்கும், திருச்சி சந்திப்பில் காலை 9.15 மணிக்கும், புதுக்கோட்டையில் காலை 9.58 மணிக்கும், காரைக்குடி சந்திப்பில் காலை 10.38 மணிக்கும், சிவகங்கையில் முற்பகல் 11.13 மணிக்கும், ராமநாதபுரத்தில் நண்பகல் 12.13 மணிக்கும் நின்றுசெல்லும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் ராமநாதபுரத்தில் பிற்பகல் 3.13 மணிக்கும், சிவகங்கையில் மாலை 4.08 மணிக்கும், காரைக்குடி சந்திப்பில் மாலை 4.38 மணிக்கும், புதுக்கோட்டையில் மாலை 5.08 மணிக்கும், திருச்சி சந்திப்பி்ல மாலை 6.05மணிக்கும், விழுப்புரம் சந்திப்பில்இரவு 8.13 மணிக்கும் நின்று செல்லும். இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் மத்தியில் அல்லது இறுதியில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.