மும்பை:
மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 17 மாநகராட்சிகளை பாஜக தனித்து கைப்பற்றியது. மும்பை உட்பட மேலும் 8 மாநகராட்சிகளை பாஜக, சிவசேனா (ஷிண்டே) அடங்கிய மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.
கடந்த 1998-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒவ்வொரு மாநகராட்சியிலும் தனித்தனியாக குலுக்கல் நடத்தப்படும்.
இதன் மூலம் குறிப்பிட்ட மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப் பிரிவு, மகளிர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினரில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி அந்தந்த மாநகராட்சிகளில் நேற்று குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் மும்பை மேயர் பதவி பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 89, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை மாநகராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் உள்ளனர். வரும் 28-ம் தேதி மும்பை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய சூழலில் பாஜக பெண் கவுன்சிலர்கள் யோகிதா சுனில் கோலி, தேஜஸ்வி அபிஷேக் கோசல்கர் ஆகியோர் முன்வரிசையில் உள்ளனர்.
உத்தவ் அணி எதிர்ப்பு: மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடந்த குலுக்கலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், குலுக்கலின்போது ஓபிசி மற்றும் எஸ்டி பிரிவு சேர்க்கப்படவில்லை என்றும் உத்தவ் அணியை சேர்ந்த முன்னாள் மேயர் கிஷோரி பட்னாகர் குற்றம் சாட்டினார்.
தற்போது எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே அணியில் மட்டுமே உள்ளனர்.
ஒருவேளை குலுக்கலின்போது மும்பை மேயர் பதவி எஸ்டி பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் உத்தவ் அணிக்கு மேயர் பதவி கிடைத்திருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
16 பெண் மேயர்கள்: மும்பையை தவிர்த்து நவிமும்பை, புனே உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக பெண் மேயர்கள் பதவியேற்க உள்ளனர்.
தற்போது நடத்தப்பட்டு உள்ள குலுக்கல் நடைமுறைக்குப் பிறகு 29 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.