புதுடெல்லி:
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி வாராணசி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தமிழரான ராஜலிங்கம். பதவி உயர்வுக்கு பிறகும் வாராணசி மண்டலத்தின் ஆணையராகத் தொடர்கிறார்.
அவர் உ.பி., மத்திய அரசுகளின் பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொகுதியில் பொறுப்புடன் செயல்படுத்துவது தான் இதற்குக் காரணம்.
அத்துடன், வாராணசியில் பிரதமர் மோடியின் எண்ணத்தில் உருவான காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
அத்துடன், கடந்த வருடம் காசி தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார். இதுபோன்ற சிறந்த பணிகளுக்காக அவரைப் பாராட்டி ‘சங்கத் தமிழன்’ எனும் விருது அளிக்கப்பட்டுள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரங்கில், காசி தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் இவ்விருது அளிக்கப்பட்டது.
ராஜலிங்கம் ஆலோசனையின் பேரில், காசி தமிழ்ச் சங்கத்தினர் வாராணசியில் தமிழ் மொழி கற்பித்து வருகின்றனர்.
இதன்மூலம், வாராணசியில் பல தலைமுறைகளாக வாழும் தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகளுக்குப் பெரும் பயனாக உள்ளது.
இவ்விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்ற ராஜலிங்கம் பேசும்போது, “காசியில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த காசி தமிழ்ச் சங்கம் மூலமாக, நம் தமிழ்நாட்டின் பெருமையை பரப்புவது அவசியம்” என்றார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுப்பையா, மாலையம்மாள் தம்பதியின் மூத்த மகன் ராஜலிங்கம். திருச்சி என்ஐடியில் வேதியியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
தமிழை விருப்பப்பாடமாக எடுத்து 2007-ல் ஐபிஎஸ் பெற்றார். பிறகு மீண்டும் அதே தமிழுடன் யுபிஎஸ்சி தேர்வை எழுதி 2008-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.
இந்நிகழ்வில் வாராணசி மாவட்ட காவல் குற்றப்பிரிவு இணை ஆணையரான தமிழர் த.சரவணன், அவரது மனைவியும் வருமான வரி இணை இயக்குநருமான ஆர்.ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், காசிவாழ் தமிழர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.