தேனி:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பதை வெளிப்படுத்தும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளில் கட்சித் தலைமை உத்தரவின்படி அமைப்புச் செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன் உள் ளிட்டோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.
கன்னிசேர்வைபட்டி கிளைச் செயலாளர்கள் சோலைமணி, முருகேசன், ராமர், பாண்டி, விஜயகுமார், சுருளிமுத்து உள் ளிட்ட 120-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை ஜக்கையன் வரவேற்றார்.
இதேபோல் ஓபிஎஸ்ஸின் சொந்த தொகுதியான போடி பகுதியைச் சேர்ந்த அவரது ஆதரவு நிர்வாகிகளான மீனாட்சிபுரம் பேரூர் தலைவர் திருப்பதி, பேரூர் செயலாளர் ராஜலிங்கம், அவைத் தலைவர் சின்ன கருப்பு, மாவட்டப் பிரதிநிதிகள் அறிவழகன், நாகம்மாள், ராஜப்பன், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட் டோர் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
ஏற்கெனவே மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுகவில் இணைந்த நிலையில் தற்போது நகர், ஒன்றிய, கிராம அளவில் வட்டார நிர்வாகிகளும் அணி மாறி வருவதால் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.