சென்னை;
பாஜகவுக்கு நாங்கள் அடிமையல்ல நண்பர்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகரில் மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் தேர்தல். இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்.
நமது தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கஜானாவில் பணம் இல்லையே என்று திமுகவினர் பேசுகிறார்கள்.
‘ஏழைகளை பாதிக்காமல் பெரும் முதலாளிகளிடம் வரி விதித்தும், மத்திய அரசிடம் தேவையான நிதியைப் பெற்றும் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’ என்று பழனிசாமி கூறியுள்ளார். 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். 150 தொகுதிகளுக்கு மேல் அதிமுக தனித்து வென்று ஆட்சி அமைக்கும்.
திமுக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை கண்டித்து வரும் 13-ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதில், ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்.
சிறுபான்மை ஓட்டு இனி திமுகவுக்கு கிடைக்காது. தமிழகத்தின் வளர்ச்சிதான் எங்களுக்கு முக்கியம். பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று திமுகவினர் சொல்கிறார்கள்.
நாங்கள் பாஜகவுக்கு அடிமையல்ல; நண்பர்கள். ஆட்சிக்கு வந்ததும் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.