சென்னை:
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியாகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கிடையே, எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

அந்த வழக்கில்நீதிமன்றம் கடந்த ஜன.29-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், முரண்பாடுகள் பிரிவில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, ‘முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படுவோர், பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்கள், மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிதர வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முரண்பாடு பிரிவில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் கடந்த7-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் மீதான மறுப்புரைகளை அளிக்க பிப்.16 வரை அவகாசம்தரப்பட்டது. இந்நிலையில், இதற்கு கூடுதல் அவகாசம்தேவைப்படுவதால், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-க்குபதிலாக, 23-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.