மாநிலத்தையே அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி – கனிமொழி எம்.பி. தாக்கு!!

தூத்துக்குடி;
மாநிலத்தையே அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பொதுவாகவே இடைக்கால பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்புகளும் வருவதில்லை. ஆனால், அதனை தாண்டி பல முக்கியமான, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தேவையான பல்வேறு விஷயங்கள் தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டை முழுமையாக படித்து பார்த்திருந்தால் தமிழக பாஜக தலைவருக்கு அது தெரிந்திருக்கும். ஏதோவெளியே போக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வெளிநடப்பு செய்து ஒரு அரசியல் நாடகத்தை அவர் அரங்கேற்றியிருக்கிறார். இது சரியானதாக இல்லை.

பாஜகவினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். ஏன் மற்ற கட்சிகளின் கூட்டணிகளை பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

திமுக யாருக்கும் அடிமையாக இல்லை. மாநிலத்தையே கொண்டு போய் டெல்லியில் இருப்பவர்களிடம் அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. திமுகவின் அடிப்படை கொள்கையே ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பது தான். ஒருவேளை இது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *