விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல்!!

தஞ்சாவூா்:
தவெக கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் அருகே அய்யாச்சாமிபட்டியில் மார்ச் 4-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்க திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த, திருச்சி கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான விக்னேஷ்(19), அவரது நண்பர் ஷாரூன்(19) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கினர்.

இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஷாரூனை நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், “தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர்கள் இருவரையும் தவெக நிர்வாகிகள் யாரும் மருத்துவ மனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறாத நிலையில், தமிழக அமைச்சரும், எம்.பி.யும் மருத்துவமனைக்கு சென்று மாணவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மருத்துவ செலவுகளை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்” என்ற தகவல் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக மத்திய மாவட்டச் செயலாளர் விஜய் சரவணன் கூறியது: விபத்து ஏற்பட்ட நாளில், தவெக நிர்வாகிகள் சென்று பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோரை சந்தித்து, ஆறுதல் கூறினர்.

முதற்கட்டமாக, ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நிர்வாகிகள் நான்கு பேர் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களின் பெற்றோருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

ஆனால், தவெகவினர் பார்க்கவில்லை என கூறுவது முற்றிலும் பொய். திமுக அமைச்சரும், எம்.பி.யும் இதில் அரசியல் செய்கிறார்கள் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *