சென்னை ,
சென்னை தியாகராய நகரில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
2 நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடி, பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக்க உள்ளார். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பிரதமரின் பேரணி நடைபெறும் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் மேலும், பேரணி நடைபெறும் தியாகராய நகர் சாலை, வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல, சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசாரத்தை முடித்து கொண்டு, நாளை வேலூர் மற்றும் நீலகிரியிலும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.