திருச்சி:
“தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக்கூட்டம் பஞ்சப்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஜவுளி நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. ஊடகங்கள் தான் எரிவாயு தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகின்றன.
அதன் அடிப்படையில் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். எரிபொருள் இருப்பு குறித்து அந்த துறை விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடும். தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்.
தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.