விசாரணைக்கு மீண்டும் அமீரை அழைத்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு!!

சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் ஆக இருந்த ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இவர் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்குனர் இயக்கியிருந்தார். இதன் காரணமாக இயக்குநர் அமீருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகினார். அவரிடம் ஜாபர் சாதி தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

பதிலளிக்க கால அவகாசம் கேட்டு என்சிபி அதிகாரிகளுக்கு அமீர் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே 11 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *