கோவை,
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டம் சுங்கத்தில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் ‘ஸ்வீப்’ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர் நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் மேரி பபியோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல்முறைகளை ஆய்வு செய்தார்.
மேலும் மாணவியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள், ரங்கோலி கோலங்கள் மற்றும் “100% வாக்குப்பதிவு நமது இலக்கு”, “உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகளையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி கூட்டரங்கில நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி பலளி மாணவியர்களின் கும்மி ஆட்டம். சேரன்மாநகர் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஜமாப் மற்றும் கோலாட்டம் ஆகியவை இடம்பெற்றன. மேலும் ‘வாக்கு வீரன்’ என்ற தேர்தல் விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது.
பின்னர் கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும், ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் தேரதலில் தவறா மல் வாக்களிப்பது ஒவ்வொருவரின ஜனநாயக கடமையாகும்” என்றார்.