மதுரை:
தவெக தலைவர் விஜய் வரவால் தேசிய ஜனநாய கூட்டணி வாக்கு வங்கியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்பதற்காகமகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மதுரை வந்தார்.
முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மாற்றம் வர வேண்டும்.
நல்ல அரசு அமைய வேண்டும் என மீனாட்சி அம்மனிடம் வேண்டினேன். தமிழகத்தில் மக்கள் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. திமுக அரசு சனாதன விரோத, இந்து விரோத அரசாக உள்ளது. இந்து சமூகத்தை வெறுக்கும் அரசாக உள்ளது.
நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள பழக்கத்தை, இந்துக்களின் பழக்கத்தை மதிக்க மறுக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் நிறைவேற்றவில்லை.
அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே இந்தத் தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
நடிகர் விஜய்யால் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. விஜய்யால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
உறுதியாக தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு அமையும். இவ்வாறு அவர் கூறினார். மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி, பாஜக பார்வையாளர் ராஜரத்தினம் உடனிருந்தனர்.