தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் கொடிகளும் தேர்தல் பரப்புரை பேச்சுகளும் நம்மை திக்குமுக்காட செய்கிறது. வருகிற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபுறம் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பினில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் சுயேட்சை வேட்பாளர்கள் மக்களின் அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றனர்.
அப்படி வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும் , நடிகருமான மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆம்பூர் பஜார் பகுதியில் ருது மொழியில் பேசி அவர் தனது வாக்கினை சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னந்தனியாக ஒரு போராளியை போல கைக்காசை போட்டு பாடுபடுகிறேன். காலில் கொப்புளங்கள் வந்துவிட்டன. கொளுத்துகிற வெயிலில் தன்னந்தனியாக போராடுகிறேன். ஜமாத் மக்கள் , தொழிலாளிகள் வழக்கம்போல திமுகவுக்கு தான் ஆதரவளிக்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் அவர்கள் கெட்டிக்காரர்கள் அல்ல என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.