சென்னை:
நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ‘‘நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால் எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன்.
ஆனால் அவர் எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று நடந்தது.
அப்போது ‘நோ கேஸ்ட், நோ ரிலீஜியன்’ என வாசகம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் பார்த்திபன், தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து நீதிபதி, ஏப்.29-ம் தேதிக்குள் மனுதாரரான பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும் பார்த்திபனின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியது தொடர்பான நகலை ஏப்.29 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட் டுள்ளார்.