பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் , கோவை வேட்பாளருமான அண்ணாமலை இன்று தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும் .
எனது ஜனநாயக கடமையை நான் நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் , பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் . நீங்கள் எங்கிருந்தாலும் இன்று மாலைக்குள் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள்.
அப்போதுதான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் பணம் கொடுக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் .
பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். முழுமையாக நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறம் சார்ந்த வேள்வி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.