சென்னை:
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படம் பல தாமதங்களுக்கு பிறகு கடந்த 15-ந்தேதி வெளியானது.
படம் வெளியானது முதல் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. ‘கருப்பு’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.207 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘கருப்பு’ பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நெகிழ்ந்து போய் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோதிகா கூறுகையில், “நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறோம். சூர்யா நல்ல கதைகளைச் சொல்வதை விரும்புகிறார்.
ஒவ்வொரு படத்திலும் ஒரு கதை இருப்பதை அவர் உறுதி செய்வார். எந்தவொரு நடிகருக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அவசியம். ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைந்திருந்தாலும், அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு விறுவிறுப்பான கதை ஓட்டத்தையும் கொண்டுள்ளது.
இதில் சூர்யா ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
குறிப்பாக, படத்தின் கடைசி 10 நிமிடங்கள் சூர்யாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
இப்படம் பெற்றுவரும் வெற்றியையும், ரசிகர்கள் கொண்டாடி மகிழும் விதத்தையும் காணும்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறோம் என்றார்.