மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் தமிழகம், புதுச்சேரியில் உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் , மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் , புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். இந்திய நாட்டுக்கு இதுவே நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம் , சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், தமிழ்நாட்டில் பல இடங்களில் பணப் பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “காசே தான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா. அது கடவுளுக்கே தெரியும்” என்றார். தேர்தல் நியாயமாக நடக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , “எனக்கு வந்த தகவல் படி நியாயமாகவே நடக்கிறது.
இன்னும் போகப்போக தெரியும்.. மாலையில் என்ன சந்திக்கும்போது நியாயமாக நடக்கிறதா என சொல்கிறேன் ” என்று கூறினார்.