புதுக்கோட்டை:
பரபரப்பான செய்திகள் எதுவும் இல்லை. அதிமுக மாவட்ட அலுவலக சாவியை பெருந்தன்மையுடன் ஒப்படைத்துள்ளோம் என அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பத்திரிக்கையின் பரபரப்புக்கும், ஊகங்களுக்கும் என்னால் எந்த செய்தியையும் சொல்ல முடியாது.
அப்படி எந்த செய்தியும் இல்லை. நான் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல சென்றிருந்தேன்.
அப்போது ஒன்றிய கழகச் செயலாளர்கள், மாநில கட்சியின் பொறுப்பாளர்களும் வழக்கம் போல என்னை சந்திக்க வந்தனர். அவர்களும் சில கருத்துக்களை முன்வைத்தனர். இது ஆலோசனை இல்லை.
விஜய பாஸ்கர் எனும் நான் 26 வயதில் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். 2001-ல் சட்டமன்ற உறுப்பினராகி, ஐந்து முறை தேர்தலில் நின்று, ஐந்து முறையும் மகத்தான வெற்றி பெற்றுள்ளேன்.
இம்முறை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். அதிமுக மாவட்ட அலுவலக சாவியை பெருந்தன்மையுடன் ஒப்படைத்துள்ளோம்.
5 நாட்களுக்கு பிறகு புதுக்கோட்டைக்கு வரும்போது, அனைவரும் ஆவலுடன் என்னை பார்க்க வருகிறார்கள். புதுக்கோட்டையின் வளர்ச்சிக்கு பல வகையில் துணை நின்றுள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.