சென்னை:
‘மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை சமய உணர்வு மற்றும் கலாச்சார உரிமையாகும்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, இந்துக்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர்.
தமிழக மக்கள் கடந்த காலங்களில் இத்தகைய போக்கை நிராகரித்துள்ளனர். தற்போதைய அரசும் அதே பாதையில் செல்வது வருத்தமளிக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம், அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாகக் கருதலாம்.
திருப்பரங்குன்றம் தீபத் தூண்விவகாரம் ஒரு சட்டப் போராட்டமாகவோ அல்லது மதமோதலாகவோ மாற்றப்படக்கூடாது. மாறாக, இது இந்து சமூகத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்.
எனவே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்குமாறும், இந்த நீண்டகால சமய நடைமுறையை கண்ணியத்துடன் நடத்த உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.