கோவை:
தமிழகத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கோவையில் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில்துறையினர் பங்கேற்றனர்.
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று, சிஐஐ தென் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தொழில்துறையினருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, தொழில் துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கையான அடிப்படைஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
ஒரு சிப்காட் அமைத்தால், அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியமாகும். தமிழக அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான அரசாகச் செயல்படும்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது சாதாரண வேலைவாய்ப்புகளே அதிகமாக உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் உயர்தர மற்றும் அதிக சம்பளத்துடனான வேலைவாய்ப்புகளை கொண்டு வருவதே அரசின் முக்கிய நோக்கம்.
இதற்காக முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே, உள்ளூர் கல்லூரிகளுடன் இணைந்து நமது இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி, அவர்களை தயார்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
எம்எஸ்எம்இ துறையை மேம்படுத்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினரின் மின் கட்டண உயர்வு பிரச்சினைக்கு மாற்றாக, சோலார் உள்ளிட்ட பசுமை ஆற்றல் முறையை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்.
கடந்த காலங்களில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 25 சதவீத ஒப்பந்தங்கள் கள அளவில் செயல்படுத்தப்படாமல், வெறும் காகித அளவிலேயே உள்ளன.
தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்லாமல் சென்னை, கோவை, மதுரை போன்ற சொந்த ஊர்களிலேயே வேலைவாய்ப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செமிகன்டக்டர் ஆலை குஜராத்துக்கு சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான முறையில்,முழு ஒத்துழைப்போடு செயல்பட்டு தமிழ்நாட்டுக்கான திட்டங்களைத் தொடர்ந்து பெற்றுத் தருவோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.