சென்னை:
அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருவதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு வழக்கறிஞர் நியமனம் தகுதி அடிப்படையில் 100 சதவீதம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுகிறது.
அனைத்து நிர்வாக நடைமுறைகளும் முடிந்த பிறகே தற்போது அரசாணைகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பு எந்த நியமனமும் செய்யப்படவில்லை.
பணி நியமனங்களில் பணம் வாங்கியதாகவோ, அமைச்சர்கள் அல்லது பிறரின் பெயரைப் பயன்படுத்தி யாராவது மோசடியில் ஈடுபட்டாலோ, பொதுமக்கள் புகார் அளிக்கலாம். தயக்கமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி அரசு ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று முதல்வர் விஜய் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.
அதேசமயம் அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று எம்எல்ஏ நிதி மூலம் தேவையான வசதிகளை செய்து தருவது தவறல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.