புதுடெல்லி:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு உறுதி அளித்ததால், தனது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார்.
இதனிடையே சோனம் வாங்சுக் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது.
அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு தனது வாக்கைக் காப்பாற்றி, மாணவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் பாயாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொதுத் தேர்வு திருத்த மசோதாவை வரவேற்கிறேன். இந்த மசோதாவின் மூலம் நாட்டின் கல்வி முறையில் பரந்த அளவிலான முன்னேற்றங்களுக்கு வழி ஏற்படும்.
நான் இப்போது டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த ரயிலில் செனாப் ரயில் பாலத்தைக் கடப்பது மிகவும் அழகான அனுபவம். இந்திய ரயில்வே குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நாட்டில் தேர்வு முறையை மேம்படுத்துவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதில் மகிழ்ச்சி.
இந்தச் சீர்திருத்தம் தேர்வுகள் சார்ந்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக் கல்வி முறையிலும் அமையும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.