அரசுப் பேருந்து சேவைகளை குறைக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்!! தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…..

சென்னை:
‘அரசுப் போக்குவரத்து என்பது வணிகமல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை ஆகும். எனவே அரசுப் பேருந்து சேவைகளை குறைக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்’ என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்தவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல பேருந்துச் சேவைகளை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும், ஏற்கனவே விழுப்புரம் அரசுப் போக்குவர த்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2000-ம் ஆண்டில் கொண்டு வந்த ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் மூலம் கிராமங்களுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அரசு, இன்று அனைத்து நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் வகையில் தரமான சாலைக் கட்டமைப்பை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய தவெக அரசு திடீரென பேருந்து சேவைகளை நிறுத்துவதால் கிராமப்புற மாணவர்களும், கூலித் தொழிலாளர்களும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.

அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப-நஷ்டத்தைப் பார்க்கும் துறையல்ல; அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சேவைத் துறையாகும்.

‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று முழங்கிவிட்டு, தவெக அதிகாரத்திற்கு வந்த 100 நாட்களிலேயே ஏழை, எளிய மக்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, ரத்து செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துச் சேவைகளையும் உடனடியாக மீண்டும் இயக்குவதோடு, மேலும் சேவைகளைக் குறைக்கும் முடிவையும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *