24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி!!

மும்பை:
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் – மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இஷான் கிஷன் 13, ரோகித் 11, நமன் 11, திலக் வர்மா 4, வதேரா 6, பாண்ட்யா 1 என பெவிலியன் திரும்பினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசினார். இவரும் டிம் டேவிட்டும் பொறுப்புடன் விளையாடி வந்தனர்.

இதனால் மும்பை அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அந்த வேளையில் 56 ரன்கள் எடுத்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகி வெளியேறினார். டிம் டேவிட்டும் 24 ரன்னில் வெளியேற மும்பை அணியின் தோல்வி பிரகாசமானது.

இதனால் மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் வருண்சக்கரவர்த்தி, சுனில் நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *