டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார்.
இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து கூறியதாவது,
டெல்லியில் உள்ள பெண்கள் கேட்கிறார்கள். முதல்வரால் (கெஜ்ரிவால்) நகரில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இந்த சம்பவத்திற்கு கெஜ்ரிவால்தான் காரணம்.
கெஜ்ரிவால் தனது கட்சி பெண் எம்.பி. மீதான தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது நம்பமுடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் பேசுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.