முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் எஸ் பி-யிடம் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் நான்கு பிரிவுகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் , 20500 அபராதமும் விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாசை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த சூழலில் ராஜேஷ் தாசின் மனைவி பீலா வெங்கடேசன் ராஜேஷ் தாஸிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் பீலா தனது கணவர் மீது சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பீலாவுக்கு சொந்தமான வீட்டில் ராஜேஷ் தாஸ் 10 பேருடன் அத்துமீறி நுழைந்து வீட்டின் பூட்டை உடைத்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்தனர் கேளம்பாக்கம் போலீசார்.
மனைவி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார்.
பீலா அளித்த புகாரின் பேரில் சென்னை கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.