11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!!

மும்பை
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

மேலும் இந்த ஐ.பி.எல்.-ல் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *