கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது: சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை !!

தருமபுரி:
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 19-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

அன்றிரவு 10 மணியளவில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவானது. அதேபோல, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கடந்த 18-ம் தேதி விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நீர் இன்று (20-ம் தேதி) காலை ஒகேனக்கல்லை அடைந்தது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் பிரதான அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதேபோல, ஐவர்பாணி என்று அழைக்கப்படும் ஐந்தருவி பகுதியிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை தொட்டபடி நீர் செல்கிறது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு விரைவில் அது ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *